தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் நகரமயமாக்கப்பட்ட மாநிலம் என்பதால் மத்திய அரசின் திட்டப்படி 50.55 சதவீத மக்களுக்கு மட்டுமே உணவு தானியங்களை வழங்க முடியும். அதனால்தான் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 1 முதல் இணைவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
திட்டத்தை ஏற்றுக் கொள்ளாத மாநிலங்களில், வறுமைக் கோட்டுக்கு மேல் வாழ்வோருக்கான அரிசி விலையை கிலோ ரூ.8.30-லிருந்து, ரூ.22.54 ஆக மத்திய அரசு உயர்த்தியது. நிபந்தனைகளை ஏற்று திட்டத்தில் இணையும்படி மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகவும், அதற்கு பணிந்துதான் இத்திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
இனி உணவு சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம்- உரிமையை மத்திய அரசிடம் தமிழக அரசு தாரை வார்த்துள்ளது. இந்தத் துரோகத்தை எதிர்த்து தமிழக அரசு போராடியிருக்க வேண்டுமே தவிர, பணிந்து போயிருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.