வன்முறைக்கு இடம் தராமல் அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பு மக்களிடமும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் போராட்டம் 200 சதவீதம் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இதை உணர்ந்துள்ள விஷமிகள் யாரேனும் அனைத்து கட்சிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்தை திசை திருப்ப முனையக் கூடும் என்று திமுக தலைமைக்குத் தகவல் வந்துள்ளது.
எனவே, போராட்டத்தை எந்தவித வன்முறைக்கும் இடம் தராமல் திமுகவினர் வெற்றிகரமாக நடத்த வேண்டும்.
யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல் விவசாயிகளுக்கான முழு அடைப்பு அறப் போராட்டத்தை ஜனநாயக முறையில் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.