ஓஎன்ஜிசிக்கு எதிராக நன்னிலத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதற்காக பதிக்கப்பட்ட குழாய்களில் சில நேரங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், டெல்டா மாவட்டங்களிலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகேயுள்ள கடம்பங்குடியில் கடந்த 25 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அப்பகுதியில் 5 எண்ணெய் கிணறுகள் உள்ள நிலையில் 6-வதாக புதிய எண்ணெய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் போராட்டம் நடத்துவதற்காக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவரும், பேராசிரியருமான ஜெயராமன் அங்கு வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டம் நடத்தவிடாமல் ஜெயராமன் உள்ளிட்ட 4 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ஜெயராமனை விடுதலை செய்யக்கோரியும், நன்னிலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற கோரியும் அப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயராமன் ஏற்கனவே, ஓஎன்ஜசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.