சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நடந்த நமபிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின்மீது தமிழக சட்டமன்றத்தில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்பொழுது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி நடந்த போராட்டத்தில் கடும் அமளிக்குப் பிறகு திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளியற்றப்பட்டனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் நடந்த நமபிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு மார்ச் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.