கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதத்தில் அமைந்துள்ள பாறைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவின் புகழ்மிகுந்த பகுதிகளுள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமமும் ஒன்றாகும். இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் நீராடுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த கடற்கரையில் பல வண்ணங்களிலான மணல்கள் குவிந்து மணல் மேடாக காண்போரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.
ஆனால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட கடலரிப்பு தடுப்புச்சுவர் இவை அனைத்தையும் அடியோடு மாற்றி விட்டது. போதிய திட்டமிடுதல் இல்லாமல் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதால் மணல் மேடு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. கரைப்பகுதி வரை வந்து செல்லும் அலைகளால் மணல் மேடு இருந்த இடத்தில் பாறைகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. தற்போது இந்தப் பாறைகளில் பாசிகள் படிந்து சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது.
முக்கடல் சங்கமத்தில் கிழக்குப் பகுதி முழுவதையும் பாறைகள் ஆக்கிரமித்து விட்டதால் மேற்குப் பகுதியில் மட்டுமே பயணிகள் நீராடிச் செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாறைகளை அகற்றவும், கடலரிப்பு தடுப்புச் சுவருக்காக கடலுக்குள் போடப்பட்ட பாறாங்கற்களை முற்றிலும் கடலுக்குள் இருந்து அகற்றிடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.