அதிமுகவின் 46 -ஆம் ஆண்டு விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் கடந்த 1971 -ஆம் ஆண்டு அதிமுக தொடங்கப்பட்டது. அதன் 46 -ஆம் ஆண்டு விழா தமிழகம் முழுதும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கும், அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், கட்சியின் கொடியை இருவரும் ஏற்றினர்.
தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில் மூத்த நிர்வாகிகள், கட்சியின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
வழக்கமாக, கட்சியின் ஆண்டு விழாவின்போது விழா மலர் வெளியிடப்படும். ஆனால், இம்முறை இரட்டை இலை சின்னம் இல்லாமல் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது என்பதுடன், விழா மலரும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.