முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீவிலி.யில் இளம் பெண் கொலை: கணவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணைக் கொலை செய்த அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 7 செப்டம்பர் 2017, 2:39 pm IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண்ணைக் கொலை செய்த அவரது கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், குலாளர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவரது மனைவி ஆவுடையம்மாள் (எ) ராஜம்மாள் (50). இவர்களது மகள் சுமிதா (21). இவர் இதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணக்குமார் (24) என்பவரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள உறவினரின் பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளார்கள். 6 மாதத்திற்கு ஒருமுறை ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து மாதா நகர் மேல்பக்கம் உள்ள சரவணக்குமாரின் பெற்றோர் வீட்டில் தங்கிச் செல்வார்களாம்.

Advertisement

Advertisement

3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு இருவரும் இங்கு வந்துள்ளார்கள். மறுநாள் சுமிதா வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளார்கள். தாயிடம் சுமிதா, சரவணனக்குமார் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாயும் இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு வருவதாயும் கூறியுள்ளார். இதனையடுத்து சரவணக்குமாரை, மாமியார் ஆவுடையம்மாள் (எ) ராஜம்மாள் கண்டித்துள்ளார். ஆத்திரமுற்ற சரவணக்குமார், தனது மனைவியை கோபமாக மிரட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து மாலையில் வீட்டிற்கு வருவதாகக் கூறி சுமிதா தாய் வீட்டிலிருந்து சென்றுள்ளார். இரவு வரை சுமிதா வரவில்லையாம்.

மறுநாள் 5-ம் தேதி கோயமுத்தூரில் உள்ள சுமிதாவின் அண்ணன், ஆவுடையம்மாளுக்கு போன் போட்டு, சுமிதாவை அவரது கணவர் அடித்துவிட்டதாயும், வீட்டில் போய் பார்க்கவும் கூறியுள்ளார். மகள் இருக்கும் வீட்டிற்குச் சென்ற ஆவுடையம்மாள் வீடு பூட்டியிருப்பதாகக் கூறி திரும்பியுள்ளார்.

6-ம் தேதி (புதன்கிழமை மாலை மகளை மீண்டும் வீட்டிற்குத் தேடிச் சென்றுள்ளார். வீடு பூட்டியிருந்துள்ளது. சந்தேகமுற்று ஜன்னல் வழியே பார்த்த போது, சுமிதா சந்தேகத்திற்கிடமான வகையில் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் ஆவுடையம்மாள் (எ) ராஜம்மாள் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ஜெ.மகேஸ்குமார் வழக்குப் பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தார்.

சடலம் கண்டெடுக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே தப்பி ஓடிய சரவணக்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுத்த காவல் ஆய்வாளர் ஜெ.மகேஸ்குமாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் பாராட்டினார்.

இந்த கொலை தொடர்பாக சிவகாசி கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.