மத்திய அரசிடம் போதுமான நிதியிருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை வழங்கவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புகளை சரிசெய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் திருமுருகன், திருச்சி தங்கவேல், மேலூர் வழக்குரைஞர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்துக்கு நிதி வழங்க முடியும் என விளமளித்த மத்திய அரசு இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் பதிலளித்தது.
இதையடுத்து எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.