முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை: மு.தம்பிதுரை

தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று

Updated On : 26 டிசம்பர் 2018, 1:26 am IST
பகிர்:


தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கூறினார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கரூர் திரும்பிய தம்பிதுரையை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தனர். இதன் பின்னர், தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியது:
தேசியக்கட்சியில் உள்ளவர்கள் அவரவர் சார்ந்த மாநிலத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர். எந்தப் பிரச்னையையும் தேசியக் கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் ஒரே அணுகுமுறைதான்.
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வராத ராகுல்காந்தி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்வையிட்டார். பிரதமர் மோடியும் வரவில்லை. தமிழகம் வஞ்சிக்கப்பட்ட மாநிலமா?.
கனவில் கூட காங்கிரஸும், பாஜக-வும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிப்பதற்காக உருவான கூட்டணிதான் திமுக- காங்கிரஸ் கூட்டணி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருக்கும்போது அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. மேலும், வழக்கில் வெற்றி பெற்ற பிறகு மேல்முறையீடுக்கும் சென்றது திமுக, காங்கிரஸ் கூட்டணி.
பொய் வழக்கில் சிறை செல்ல நேரிட்ட மன உளைச்சல் காரணமாகத்தான் ஜெயலலிதா உயிரிழந்தார். எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் காங்கிரஸும், திமுகவும் தான். வேறு யாரும் இதற்கு காரணம் இல்லை. இதை நாட்டு மக்கள் புரிந்து கொள்வர். அதற்கான காலம் வந்து கொண்டிருக்கிறது.
திமுக, காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதன் மூலம்தான் ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் நன்றியாக இருக்க முடியும். தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு ஒருபோதும் இடமில்லை. கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றதைப் போன்று வரும் மக்களவைத் தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
மேக்கேதாட்டு அணை தேவையற்றது. அதனை கட்டுவதற்கு அனுமதிக்கவும் கூடாது. எனவே, அணை கட்டுவதற்கான கருத்துருவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மின்சாரம் உற்பத்திக்கு அணை கட்டுவதாக இருந்தால் ஒகேனக்கல்லில் கட்டிக் கொள்ளலாம். இரு மாநில எல்லைக்கும் பொதுவாக இருக்கும். இரு மாநில அரசுகளும் கண்காணிக்கலாம். மின்சாரத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். 
மாறாக மேக்கேதாட்டுவில் அணை என்பது கர்நாடகத்துக்கு மட்டுமே பயனளிக்கும். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் நிலையிலிருந்து பேசுவதே சிறந்தது.
திமுக-வுக்கும் இந்த விவகாரத்தில் உண்மையான அக்கறையில்லை. 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம்தான் பதில் அளிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments