தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப்
சென்னையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் மயக்கமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
7-ஆவது ஊதியக் குழுவில் உள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 1,000-த்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் திங்கள்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் எழும்பூர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் காரணமாக ராஜரத்தினம் அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.