முகப்பு
தமிழ்நாடு

திவால் என்று அறிவித்து விடுங்கள்: ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் மனு! 

அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை 'திவால்' என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 பிப்ரவரி 2018, 4:54 pm IST
பகிர்:

புதுதில்லி: அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை 'திவால்' என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரத்தில் ஏர்செல் செல்லிடப்பேசி சேவையில் பிரச்னை ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகினர். இந்நிலையில் ஏர்செல் செல்லிடப் பேசி சேவையில் புதன்கிழமை மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனத்தின் தென்னிந்திய தலைமைச் செயல் அதிகாரி சங்கரநாராயணன் புதன் காலை தகவல் தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக முன்னதாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'ஏர்செல் செல்லிடப் பேசி சேவையின் சிக்னல் கிடைப்பதில் இன்று மாலை முதல் மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகள் வாடகைப் பணம் நிலுவை தொடர்பான பிரச்னையில், தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த  டவர்களில் சிக்னல் விநியோகத்தினை நிறுத்தியதால் சேவை தடைபட்டது.

Advertisement

தற்பொழுது மீண்டும் அதே மாதிரியான சிக்கல்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதற்கான மாற்று ஏற்பாடுகளிலும் ஏர்செல் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இருந்த போதிலும் ஏர்செல் எண்னை வங்கிப் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துபவர்கள் இன்று மாலை அல்லது மதியத்துக்குள் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.' என்று தெரிவித்திருந்தார்.

தற்பொழுது அதிகரிக்கும் கடன் நெருக்கடியின் காரணமாக தங்களை 'திவால்' என்று அறிவித்து விடுமாறு ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் ரூ.15,500 கோடிக்கும் அதிகமாக கடன் சுமை இருப்பதால் தங்களை 'திவால்' என்று அறிவித்து விடுமாறு, ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளது என்று தெரிகிறது.

அதே நேரம் நடப்பில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்குள் மாற்று ஏற்பாடுகளை ஏர்செல் நிறுவனம் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்திற்குதொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.