மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 3 வாரத்துக்குள் தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோலார்பட்டியில் புதிய மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதிய மருத்துவமனை கட்டடத்தை திறந்துவைத்தனர்.
முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் நடராஜன், விஜயகுமார், தனியரசு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ருக்மணி, சார் ஆட்சியர் காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோலார்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் அவசர சிகிச்சைப் பிரிவு, பிரசவ அரங்கு, கண் சிகிச்சைப் பிரிவு, இருதய சிகிச்சைப் பிரிவு அரங்கு ஆகியனகட்டப்பட்டுள்ளன.
மருத்துவமனை கட்டடத்தை திறந்துவைத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
இந்தியாவில் மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்ந்துவருகிறது.
மருத்துவ வசதிகள் மேம்பாட்டுக்காக கோவை மாவட்டத்துக்கு மட்டும் ரூ.317 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 3 வாரத்துக்குள் தொடங்கும். தமிழகத்தில் சித்த மருத்துவப் பிரிவுகளுக்குப் புதிதாக 72 மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பட்டய நர்ஸிங் படிப்பு தொடங்கப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: உடுமலையில் புதிதாக ரூ.2 கோடியில் ஸ்கேன் மையம் அமைக்கப்பட உள்ளது. பேறு கால உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.