சீர்காழியில் அதிமுக நிர்வாகி வெடிகுண்டு வீசி கொலை
நாகை மாவட்டம், சீர்காழியில் அதிமுக நிர்வாகி பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், சீர்காழியில் அதிமுக நிர்வாகி பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
சீர்காழி வட்டம், எடமணல் கிராமத்தைச் சேர்ந்த லெட்சுமிகாந்தன் மகன் ரமேஷ்பாபு (47). தொழிலதிபரான இவர், கொள்ளிடம் ஒன்றிய அதிமுக மாணவரணி துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவர், சீர்காழி தென்பாதி திரிபுரசுந்தரி நகரில் கட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பேருந்து அதிபர் வீட்டுக்கு தனது சொகுசு காரில் திங்கள்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் சென்றுள்ளார். காரை இளவரசன் (25) என்பவர் ஓட்டிச் சென்றார். அங்கு அவர் பேசிக்கொண்டிருந்தபோது செல்லிடப் பேசிக்கு அழைப்பு வந்துள்ளது. இதனால், ரமேஷ்பாபு வெளியே வந்து தனது காரில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார். ஓட்டுநரும் உடனிருந்தார்.
அப்போது, அந்த பகுதிக்கு சிவப்பு நிற கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், ரமேஷ்பாபு கார் மீது மூன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ரமேஷ்பாபு காரிலிருந்து தப்பி வெளியேறுவதற்குள் அவர் மீது மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், அரிவாளால் வெட்டியும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே ரமேஷ்பாபு உயிரிழந்தார். கார் ஓட்டுநர் அருகில் இருந்த பேருந்து அதிபர் வீட்டுக்குள் தப்பி ஓடிவிட்டார். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நின்றவர்கள் அலறியடித்து ஓடினர். இக்கொலை சம்பவம் குறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து, கொலையாளிகளை தேடிவருகின்றனர், மேலும், தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் சீர்காழி பகுதியில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.