வெளிநாடுகளில் சொத்து வாங்கிய வழக்கு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆஜராக உத்தரவு
வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கியது தொடர்பான கருப்புப் பண சட்ட விவகாரத்தின் கீழ் வருமான வரித் துறை தாக்கல் செய்த புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்,
வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கியது தொடர்பான கருப்புப் பண சட்ட விவகாரத்தின் கீழ் வருமான வரித் துறை தாக்கல் செய்த புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வரும் ஜூலை 30-ஆம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்து விவரங்களை அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2015-இல் கொண்டுவரப்ப பட்ட சட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பிலான இரண்டு சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்பிலான சொத்து வாங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் கருப்பு பண சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது. இந்தப் புகார் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர்விழி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து, அவர் முன், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி நேரில் ஆஜராகினார். வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக 3 பேரையும் ஜூலை 23-ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி மலர்விழி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் குடும்பத்தினர் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி, வழக்கை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.