சென்னை: தமிழக அரசுக்கு கடன் நிலுவையில் இருக்கும் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடன் வாங்கி நினைவு மண்டபம் கட்ட வேண்டுமா என்று திமுக கேள்வி எழுப்பியது.
சட்டப்பேரவை இன்று காலை கூடியதும், திமுக உறுப்பினர் ரங்கநாதன் இந்த கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் தங்கமணி, திமுகவின் கேள்வி ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது. கடன் வாங்கி நினைவு மண்டபம் கட்டுவதாக பட்ஜெட்டில் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று ரங்கநாதன் கூறிய குற்றச்சாட்டுக்கு தங்கமணி பதிலளிக்கையில், திமுக ஆட்சியில் சேலம் காவல் ஆய்வாளர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டார்.
கொலைக்குக் காரணமாக இருந்ததாக திமுக நிர்வாகி சுரேஷ் கைது செய்யப்பட்டார். பாப்பாரப்பட்டி சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, அவரை சிறைக்குச் சென்று அப்போது அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் நேரில் சந்தித்துப் பேசினார் என்று பதில் கூறினார்.
இதற்கு விளக்கம் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், விசாரணையில், பாப்பாரப்பட்டி சுரேஷ் மீதான குற்றத்துக்கு ஆதாரமில்லை என்று விடுதலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.