மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
இலங்கையையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக
இலங்கையையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய உள்ளதை அடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
இலங்கையையொட்டி, தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காணப்படுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையவுள்ளது. இது மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை -குமரிக்கடல் இடையே செவ்வாய்க்கிழமை (நவ.6) முதல் வியாழக்கிழமை (நவ.8) வரை கடக்கக் கூடும்.
பலத்த மழைக்கு வாய்ப்பு: இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும். தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்தப் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்று வீசக்கூடும். எனவே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் அவர்.
மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் 20 மி.மீ., நாகை மாவட்டம், ஆணைக்காரன்சத்திரம், நீலகிரி மாவட்டம் கேட்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூர், சிவகங்கை மாவட்டம், திருபுவனம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.