முகப்பு
தமிழ்நாடு

இடைத்தேர்தல்: அதிமுக அஞ்சுகிறது

மழையைக் காரணம் காட்டியிருப்பதன் மூலம் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக எவ்வளவு தூரம் அஞ்சுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதாக

Updated On : 9 அக்டோபர் 2018, 1:41 am IST
பகிர்:


மழையைக் காரணம் காட்டியிருப்பதன் மூலம் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலைக் கண்டு அதிமுக எவ்வளவு தூரம் அஞ்சுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் மட்டுமல்ல, அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே ஊழல் உள்ளது.
இது குறித்து நாங்கள் ஏற்கெனவே தமிழக ஆளுநரிடம் பலமுறை மனுக்கள் தந்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருக்கிறோம். அதையும் தாண்டி, நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கும் தொடுத்துள்ளோம். வழக்கு நிலுவையில் இருந்து கொண்டிருக்கிறது. 
இதற்கிடையில், ஏற்கெனவே நாங்கள் ஆளுநரைச் சந்தித்த நேரத்தில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்றிருக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பல மனுக்களைத் தந்துள்ளோம். ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது ஆளுநரே சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது என்று பேசியிருப்பது வேதனையைத் தருகிறது.
எனவே, இது குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருக்கிறோம். ஊழல் குறித்து உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க வேண்டும் என்று நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம்.
மழையைக் காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல்களை ஒத்தி வைத்திருக்கிறார்களே, இது ஏற்கக் கூடியதா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். இந்த இரு தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத் தேர்தல்களைச் சந்திப்பதற்கு ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக எந்த அளவுக்கு பயந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.