எழுத்தாளர் மாலனுக்கு 'பாரதிய பாஷா' விருது
நாட்டின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படும் 'பாரதிய பாஷா' விருது, தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு நிகழாண்டு வழங்கப்படவுள்ளது.
நாட்டின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படும் 'பாரதிய பாஷா' விருது, தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு நிகழாண்டு வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டுகளில், அசோகமித்ரன், ஜெயகாந்தன், சாண்டில்யன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, சி.ஆர்.ரவீந்தரன், லக்ஷ்மி, பிரபஞ்சன், வைரமுத்து, பா. ராகவன் உள்ளிட்டோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் மாலன், இலக்கிய உலகில் பல சிறப்புகளைப் பெற்றவர். இவர் 20 -க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது கதைகள் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் மட்டுமின்றி சீனம், மலாய், பிரெஞ்சு போன்ற உலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த இவர், 'சரஸ்வதி சம்மான்' விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர் ஆவார். பல அயலகப் பல்கலைக் கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர்.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் 'லீ காங் சியான் ஆய்வுக் கொடை' வழங்கப்பட்டு சிங்கப்பூரில் 6 மாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்த கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும், தமிழரும் இவரே.
Advertisement
Advertisement
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரதிய பாஷா பரிஷத் (இந்திய மொழிகள் கழகம்) ஓர் அரசுசாராத் தன்னார்வ இலக்கிய அமைப்பாகும். இந்திய மொழிகளில் எழுதப்படும் இலக்கியங்களின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் பங்களிப்பது அதன் முக்கிய நோக்கம்.
ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. ரூ.1 லட்சம் பொற்கிழியும், பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது. பரிசளிப்பு விழா, வரும் மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது என பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.