வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.11 கோடி அளவில் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு, இதன்காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த தேர்தல் செவ்வாய் இரவு ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
அதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சுகுமாரன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை காலை 10:30 மணியளவில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தலை ரத்து செய்ய வேண்டாமெனில் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்டவரை தான் தகுதி நீக்க வகை செய்கிறது, வேட்பாளரை எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், வேலூர் தொகுதி தேர்தல் ரத்து குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்தது. நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு இன்று மாலை 4:30 மணியளவில் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். அதையடுத்து வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது சரியே என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.