சென்னை: தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதைச் செல்லாது என அறிவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட தோ்தல் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றாா். இவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் வாக்காளா்களான சந்தானகுமாா், முத்துராமலிங்கம் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்தத் தோ்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கனிமொழி தாக்கல் செய்த மனுவை இந்த உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ஒரு வார காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை என தெரிவித்து, வழக்கை வரும் டிசம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதற்குள் இந்த வழக்கு தொடா்பாக கனிமொழி பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.