மக்களவைத் தேர்தல்: திமுகவில் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு, புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. இதர கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் 21 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் திங்கள்கிழமை (பிப்.25) முதல் விருப்ப மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்பமனுக்கள் அளிக்கப்பட்டன. இதில், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட 90-க்கும் மேற் பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.மார்ச் 7-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைக் கட்சித் தலைமையிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில்,கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்திருந்தால், அதற்காக செலுத்திய கட்டணத் தொகை திருப்பித் தரப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.