முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள்: மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு

Updated On : 24 ஜனவரி 2019, 1:40 am IST
பகிர்:


கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் மின் இணைப்பை உடனடியாக துண்டித்து அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானலைச் சேர்ந்த பலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாஸ்டர் பிளானை மாற்ற வேண்டும். ஆனால் கடந்த 1993-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் இதுவரை மாற்றப்படவில்லை. மேலும் 1984-88 இன் மக்கள்தொகை, சுற்றுலாப் பயணிகள் வருகை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் 1999-இல் தயாரிக்கப்பட்ட புதிய மாஸ்டர் பிளானுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 
தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கேற்ப அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அவசியம். ஆனால், விதிகளை மீறி கட்டடம் கட்டியுள்ளதாக கூறி நோட்டீஸ் அனுப்புவது, சீல் வைப்பது போன்ற பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, புதிய மாஸ்டர் பிளான் அமலாகும் வரை நோட்டீஸ் அனுப்பவும், சீல் வைக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். 
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கொடைக்கானலுக்கான புதிய மாஸ்டர் பிளான் திட்டம் 3 மாதங்களில் இறுதி செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, நகராட்சி நிர்வாகம் சார்பில், கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், விதிமுறைகளை மீறி கட்டிய கட்டடங்களின் மின் இணைப்பை புதன்கிழமையே (ஜன.23) துண்டித்து அது தொடர்பான விவரங்களை நகராட்சி ஆணையர் மற்றும் மின்துறை செயற்பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.