பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தால் பாஜகவுக்கு பயம்: புதுவை முதல்வர் நாராயணசாமி
பிரியங்காவின் தீவிர அரசியல் பிரவேசத்தால் பாஜகவுக்கு பயம் வந்து விட்டது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
பிரியங்காவின் தீவிர அரசியல் பிரவேசத்தால் பாஜகவுக்கு பயம் வந்து விட்டது என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசம் கிழக்கு பகுதிக்கான அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலராக பிரியங்காவை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து, புதுவையில் காங்கிரஸ் மகளிர் அணியினர், கட்சித் தலைமை அலுவலகம் முன் மாலையில் கூடி பிரியங்காவுக்கு ஆதரவாக வாழ்த்துக் குரலெழுப்பினர். அப்போது, முதல்வர் வே.நாராயணசாமி, புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோர் அங்கு வந்தனர்.
பின்னர், முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் ராஜா திரையரங்கு வரை நடந்து சென்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரியங்கா தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் பல ஆண்டுகளாக விரும்பி வந்தனர். மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், பிரியங்காவுக்கு உத்தரப்பிரதேசம் கிழக்குப் பகுதிக்கான அகில இந்திய பொதுச் செயலர் பதவி வழங்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் பிரியங்காவின் தீவிர அரசியல் பிரவேசம். தியாக குடும்பத்தில் இருந்து வந்த ராகுல் காந்தி, பிரியங்கா ஆகிய இருவரும் காங்கிரஸை வழி நடத்துவது, கட்சிக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும். 2019-இல் காங்கிரஸ் வலுவான இயக்கமாக மாறும்.
பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பாஜகவுக்கு உள் ஜுரம், பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியங்காவை இந்திரா காந்தியைப் பார்ப்பது போல மக்கள் உணர்கின்றனர்.
தனக்கு கொடுத்த பொறுப்பை பிரியங்கா காந்தி சிறப்பாகச் செய்வார். தேசிய அளவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்றார் முதல்வர் நாராயணசாமி.
இந்த நிகழ்ச்சியில், புதுவை காங்கிரஸ் பொதுச் செயலர் ஏகேடி.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்பட பலர் பங்கேற்றனர்.