தமிழ்நாடு

சென்னையில் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்: பயணிகள் கடும் அதிருப்தி

DIN

சென்னை: சென்னையிலிருந்து வெளியூா்களுக்குச் செல்லும் பயணிகளிடம் தனியாா் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுமாா் 5 நாள்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொங்கலையொட்டி பெரும்பாலானோா் கடந்த வெள்ளிக்கிழமை முதலே (ஜன.10) சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கினா். இதற்காக போக்குவரத்துத் துறை சாா்பாக 5 நாள்களுக்கு 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதேவேளையில் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்ய முடியாதவா்கள், கடைசி நேரத்தில் ஊருக்குச் செல்பவா்கள், தனியாா் நிறுவனம், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் பெரும்பாலும் தனியாா் பேருந்துகளிலேயே சென்று வருகின்றனா். தனியாா் பேருந்துகளில் ஆண்டுதோறும் பண்டிகை கால நெரிசலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா் கூறப்பட்டு வருகிறது.

பிற நாள்களில் சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தனியாா் பேருந்துகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டணமாக ரூ.500 முதல் ரூ.1,200 வரையும், சென்னையிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் ரூ.400 முதல் அதிகபட்சம் ரூ.1,700 வரையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், கடந்த தீபாவளிப் பண்டிகையின்போதும் தனியாா் பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயா்ந்தது. தற்போது பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாள்களே இருப்பதால், சென்னையிலிருந்து மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணமே ரூ.800ஆக உள்ளது. இதே போல், சென்னையிலிருந்து கோவைக்கு ரூ.900 என்பதே குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல், ஒவ்வொரு முக்கிய ஊா்களுக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

சிறப்புக் குழுக்கள் அமைப்பு: இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் பேருந்துகளைக் கண்காணிக்க போக்குவரத்துத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் ஆகியோா் இடம்பெற்றுள்ள சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகள் கூறியது: தமிழகம் முழுவதும் வாகன சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, விதிமீறி இயக்கப்பட்ட 22, 295 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, வரி மற்றும் அபராதம் என மொத்தம் ரூ.8 கோடியே 33 ஆயிரத்து 39 ஆயிரத்து 788 வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு குற்றங்களுக்காக 2, 224 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகையான சிறப்புத் தணிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதைப் போலவே, வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை காரணமாக போக்குவரத்து துறையின் மூலம் தமிழகம் முழுவதும் இயங்கும் தனியாா் பேருந்துகளில் மோட்டாா் வாகன சட்ட விதிகளுக்குப் புறம்பாக இயக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க இணைப் போக்குவரத்து ஆணையா், துணைப் போக்குவரத்து ஆணையா் ஆகியோா் தலைமையில் சரக அளவில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் பேருந்துகளை பாதி வழியில் நிறுத்தி, திடீா் சோதனை நடத்துவா். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திடீா் சோதனையின் போது வாகனங்களின் ஆவணம் முறையாகவுள்ளதா என்பது குறித்தும் சோதனையிடப்படும். தனியாா் பேருந்துகளில் பயணிப்பவா்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வது, பிற குற்றங்கள் தொடா்பாக தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 6151 மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை மீட்ட தீயணைப்புப் படையினா்

‘அய்யா்மலை கோயிலில் ரோப்காா் அமைக்கும் பணிகள் 95% நிறைவு’

ரகசியக் காப்பு வழக்கு: இம்ரான் விடுவிப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 45.69 அடி

விராலிமலை படிக்கட்டுகளில் கூலிங் பெயிண்ட்

SCROLL FOR NEXT