ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் திங்கள்கிழமை மாலை திடீரென தீ பற்றியது.
ராஜபாளையம், சேத்தூர் மற்றும் தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை வன சரகம் அமைந்துள்ளது. இந்த சரகமானது அய்யனார் கோவில், வாழைகுளம், ராஜாம்பாறை, அம்மன் கோவில், கோட்டைமலை, பிறாவடியார், நாவலூத்து, தேவியாறு, சாஸ்தா கோயில் என 9 பீட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் திங்கள்கிழமை மாலையில் பிறாவடியார் பீட் பகுதியில் திடீரென காட்டு தீ பற்றியது.
ஒரு பகுதியில் பற்றிய காட்டு தீ, வனப்பகுதியில் வீசிய பலமான காற்றால் மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகள் முழுவதும் பரவியது. மலையைச் சுற்றிலும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 100 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் தீ கொழுந்து விட்டு எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
பிறாவடியார் பீட்டில் பற்றிய தீ தற்போது அருகே உள்ள நாவலூத்து பகுதிக்கும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த தீ விபத்தால் மலையில் உள்ள புல் வகைகள் மற்றும் அரிய வகை மூலிகைச் செடிகளும், மரங்களும் தீயில் எரிந்து வருகிறது.
இரவு நேரத்தில் காற்று பலமாக வீசி வருவதால், அருகே இருக்கக் கூடிய பகுதிகளிலும் தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்த தீ விபத்தில் வனப்பகுதிக்குள் வசிக்கக் கூடிய காட்டெருமை, யானை, மான், மிளா, கரடி, உள்ளிட்ட வன விலங்குகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
தற்போது பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த தீ எரியும் பகுதியான பிறாவடியார் மற்றும் நாவலூத்து பீட் பகுதிக்கு முதற்கட்டமாக வனத்துறையினர் மற்றும் தீ தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் விரைந்துள்ளனர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.