சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 76 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் சிஆர்பிஎப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுழற்சி முறையில் பணிபுரிவதற்காக காவலர்கள் பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள சிஆர்பிஎப் தலைமை அலுவலகத்தில் இருந்து பணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிஆர்பிஎப் காவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு புதன்கிழமை கிடைத்தது. இதில் ஆளுநர் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் 76 காவலர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து 76 பேரும் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து பூந்தமல்லி தலைமை அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து சிஆர்பிஎப் காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்துவதற்கு அப் பிரிவு உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.