கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஆதிகேசவன் மாயமானதைத் தொடர்ந்து தன் தந்தையை மீட்டுத்தரக்கோரி அவரது மகன் துளசிதாஸ் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரை கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன் தங்கள் எல்லை முடிந்துவிடுவதாகவும், அதற்கு பின்னர் சுகாதாரத் துறைக் கட்டுப்பாட்டில் தான் நோயாளிகள் கவனிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தங்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதாகவும், பராமரிக்கப்படும் பதிவேடுகளை தாக்கல் செய்வதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாயமான ஆதிகேசவன் தேடுதல் குறித்து விளக்கமளிக்க ஒரு வார அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.