நாமக்கல்லில் சிலம்பொலி சு. செல்லப்பனார் மணிமண்டபம்: பூமிபூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு
மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்: மறைந்த தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் நினைவு மணிமண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் அருகே சிவியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பொலி சு. செல்லப்பன். கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி காலமானார்.
அவரது நினைவாக ஏழு அடி உயரம் கொண்ட முழு வெண்கலச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் மற்றும் தமிழாஆய்வு மையம் ஆகியவை கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் கொண்டம்பட்டி மேடு சிலம்பொலி நகரில் இன்று காலை 7.45 மணி அளவில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
சிலை அமைப்புக் குழு உறுப்பினர் பூங்கோதை செல்லத்துரை தானமாக வழங்கிய இடத்தில் மணிமண்டபம் அமைகிறது. தமிழறிஞர் சிலம்பொலி சு. செல்லப்பனார் திருவுருவ வெண்கலச் சிலை 7 அடி உயரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், அவருடைய நினைவு மணிமண்டபம் ரூ.20 லட்சம் மதிப்பிலும், தமிழ் ஆய்வு மையம் ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நடைபெற உள்ளன. தமிழாய்வு மையத்தில் சிலம்பொலியார் பயன்படுத்திய மற்றும் அவர் எழுதிய புத்தகங்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
இந்த தமிழாய்வு மையத்தை வெளிநாடு, உள்நாட்டு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. பூமிபூஜை விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், பூங்கோதை செல்லத்துரை, சிலம்பொலியார் மகன் கொங்குவேள் மற்றும் குடும்பத்தினர், தமிழறிஞர்கள், பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சிவியாம்பாளையம் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தமிழறிஞர் சிலம்பொலி. சு. செல்லப்பனார் முழு உருவ சிலை, மணிமண்டபம், தமிழாய்வு மையம் கட்டட அமைப்பு குழுவினர் செய்திருந்தனர்.