பாண்டியன் ஸ்டோர்ஸ் 'முல்லை' மரணம் காரணம் என்ன?
சின்னத்திரை பிரபரல நடிகை சித்ரா(28) ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை: சின்னத்திரை பிரபரல நடிகை சித்ரா(28) ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருவான்மியூரை சேர்ந்த சித்ரா, 1992 ஆம் ஆண்டு மே 2 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். கல்லூரி படிப்புக்கு பின்னர், 2013 ஆம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் "சட்டம் சொல்வது என்ன" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது தொலைக்காட்சி பயணத்தை தொடர்ந்தவர், நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுத்தலாம் வாங்க என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொலைக்காட்சியில் பிரபலமடைந்தவர். பின்னர், வேந்தர் தொலைக்காட்சி, ஜீ தமிழ், சன், விஜய் என சித்ராவின் தொகுப்பாளினி நீண்டது. சன் தொலைக்காட்சியில் "சின்னப் பாப்பா பெரிய பாப்பா" தொடரில் நடித்து சின்னத்திரை நடிகையாக பிரபலமான சித்ரா, விஜய் தொலைக்காட்சி பிரபல தொடரான " பாண்டியன் ஸ்டோர்ஸ்" - இல் கதிருக்கு இணையாக முல்லையாக நடித்து மக்கள் மனங்களில் முல்லையாக மனம் வீசியவர் சித்ரா.
இந்நிலையில், அவரது திடீர் தற்கொலை ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Advertisement
Advertisement
கடந்த செப்டம்பர் மாதம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் சின்னத்திரை சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திடீரென சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு காரணம் என்ன?
நடிகை சித்ரா சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் அறையில் தங்கியிருந்து தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தொடரின் படப்பிடிக்கு சென்றுவிட்டு அதிகாலை 2 மணியளவில் நட்சத்திர விடுதிக்கு திரும்பிய சித்ரா, தனது அறையில் இருந்த தனது வருங்கால கணவர் ஹேமந்த்திடம் தான் குளிக்கப் போகிறேன், நீங்க வெளியே இருங்க என சொல்லி விட்டு கதவை தாழிட்டவர், நீண்ட நேரம் கடந்தும் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அறையை திறக்க முயற்சித்து முடியாமல், ஊழியர்களை அழைத்து இன்னொரு சாவி மூலமாக அறையை திறந்ததும் சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு ஹேம்நாத் அதிர்ந்து போனதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சித்ராவின் உடலை கைப்பற்றிய காவலர்கள் பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சித்ராவின் தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகவல்கள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வருங்கால கணவர் ஹேமந்த் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நிலையில், சித்ராவின் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
இன்ஸ்டாகிராமில் மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களின் மனங்களில் மனம் வீசிய முல்லை மறைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு தங்களது கண்ணீர் இரங்கல்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சின்னத்திரையில் மேலும் பல உயரங்களை அடைவார் என கணிக்கப்பட்ட சித்ராவின் இந்த பரிதாப முடிவும் அவர் நடித்த முல்லை கதாபாத்திரத்தையும் ரசிகர்களால் என்றைக்கும் மறக்க முடியாது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.