முகப்பு
தமிழ்நாடு

திமுக-வில் சாதாரண மக்கள் பதவிக்கு வரமுடியாது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திமுக-வில் சாதாரண மக்கள் எவரும் பதவிக்கு வரமுடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 ஜனவரி 2021, 10:08 pm IST
பகிர்:

திமுக-வில் சாதாரண மக்கள் எவரும் பதவிக்கு வரமுடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை ராமநாதபுரம் மாவட்டத்திலும், 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையிலிருந்து இன்று மதுரைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். மதுரை விமான நிலையம் வந்திறங்கிய அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பகுளம் பகுதிகளில் பொதுமக்கள் அளித்த வரவேற்பினை ஏற்றுக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, 2021 ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரவிருக்கின்றது. அந்தத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். 
இது உங்கள் அரசு, மக்களுடைய அரசு, மக்கள் என்ன எண்ணுகின்றார்களோ அதை நிறைவேற்றுகின்ற அரசாக எங்களுடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களுடைய அரசைப் பொறுத்தவரை, அம்மா வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மா என்னென்ன திட்டங்ளைக் கொண்டுவந்தார்களோ, அவற்றையெல்லாம் சிந்தாமல், சிதறாமல் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு, அவதூறு பிரசாரத்தை செய்து வருகிறார். 
தைப்பொங்கலன்று எல்லா இல்லங்களிலும் சிறப்பாக தைப்பொங்கல் கொண்டாட 2 வேண்டுமென்பதற்காக, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கவிருக்கின்றோம், முழு கரும்பு கொடுக்கின்றோம், தைப்பொங்கல் பரிசு கொடுக்கின்றோம். அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் கொடுக்கின்றோம். இதில் என்ன தவறு இருக்கிறது? ஏழைகளுக்கு கொடுப்பது தவறா? திமுக ஆட்சியில் என்றைக்காவது கொடுத்திருக்கிறார்களா? ஏழைகள் வாழ்ந்த சரித்திரம் உண்டா திமுக ஆட்சியில்? மக்கள் அனைவரும் அழகாக பொங்கல் வைத்து, மகிழ்ச்சியாக வீட்டில் கொண்டாடுங்கள். 
கருணாநிதி ஆட்சியில் ஒரு குடும்பம் தான் வாழ்ந்தது. அவர் குடும்பத்தில் இருப்பவர்கள்தான் அதிகாரத்திற்கு வரமுடியும், பதவிக்கு வரமுடியும். இங்கு மேடையில் வீற்றிருக்கின்ற சாதாரண மக்கள், இங்கு என் முன் நின்று கொண்டிருக்கிறீர்களே உங்களைப் போன்றிருக்கின்ற சாதாரண மக்கள் எவரும் திமுக-வில் எந்தப் பதவிக்கும் எந்தக் காலத்திலும் பதவிக்கு வரமுடியாது. அங்கு வாரிசு அரசியல் மட்டுமே. முதலில் கருணாநிதி வந்தார், அப்புறம் ஸ்டாலின் வந்துவிட்டார், அப்புறம் உதயநிதி வந்துவிட்டார், ஸ்டாலினுடைய பேரன் இப்போது ரெடியாகிவிட்டார். 
ஆக, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல் இந்த 2021ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தல். எனவே, உழைக்கின்றவர்கள், நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments