ரஜினிகாந்த் நலம் பெற வேண்டி ஸ்ரீவாஞ்சியத்தில் ஆயுள் விருத்தி ஹோமம்
பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் முழு பூரண உடல் நலம் பெற வேண்டி, ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள ஸ்ரீஎமதர்மர் சன்னதியில் வியாழக்கிழமை ஆயுள் விருத்தி ஹோமம் நடைபெற்றது.
நன்னிலம்: பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் முழு பூரண உடல் நலம் பெற வேண்டி, ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள ஸ்ரீஎமதர்மர் சன்னதியில் வியாழக்கிழமை ஆயுள் விருத்தி ஹோமம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகிலுள்ள புகழ்பெற்ற ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாதர் ஆலயத்தில், ஆயுள் விருத்தி ஹோமம், திருவாருர் மாவட்ட மற்றும் ஒன்றிய, நகர ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேறு எந்த கோயிலிலும் இல்லாதச் சிறப்பாக, ஸ்ரீவாஞ்சியம் கோவிலில் எமதர்மராஜா மற்றும் சித்திரகுப்தருக்கு தனி சன்னதி உள்ளது. இது ஆயுள்விருத்தி ஸ்தலம் எனப் போற்றப்படுகிறது.
இந்த ஸ்தலத்தில் உள்ள எமதர்மராஜா மற்றும் சித்திரகுப்தர் சன்னதியில், ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபட்டால், மிக மோசமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளவர்கள் கூட, நல்ல உடல்நலம் பெறுவதாக ஐதீகம். இந்த ஸ்தலத்தில் உடல் நலம் பெற வேண்டியும், ஆயுள் விருத்திக்காகவும் தினசரி நூற்றுக்கணக்கானவர்ள் ஹோமம் நடத்துவது வழக்கம்.
Advertisement
Advertisement
இதனைப் போன்று ரஜினிகாந்த் முழு பூரண உடல் நலம் பெற வேண்டி, ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் சார்பில் வியாழக்கிழமை ஆயுள் விருத்தி ஹோமம் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் தாயுமானவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் கலையரசன், ஒன்றியச் செயலாளர்கள் சங்கர், ஜெகதீசன், ஸ்ரீதர், ஞானவேல், குமார், முத்து, நகர செயலாளர்கள் ஐயப்பன், லெனின் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் ஆசானாகப் போற்றப்படுபவருமான கே. பாலச்சந்தர் பிறந்த ஊரான நன்னிலத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, ரஜினி மக்கள் மன்றத்தினர் பிரார்த்தனை செய்தனர்.