ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!
ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்களை ரயில்வே பாதுகாப்புப் படை பறிமுதல் செய்துள்ளது.
ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்களை ரயில்வே பாதுகாப்புப் படை பறிமுதல் செய்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில், ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு ஸ்மார்ட்போன்களுடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். இதன் மொத்த மதிப்பு ரூ. 59 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி கூறுகையில், "தகவல் கிடைத்ததும், குமானி மற்றும் பர்ஹர்வா ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு குழுவினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ரயிலின் பொதுப் பெட்டியில் சோதனை நடத்தியபோது, சந்தேகத்திற்கிடமான இரண்டு பயணிகளை ஆர்பிஎஃப் காவலர்கள் அடையாளம் கண்டனர்.
Advertisement
Advertisement
ஆர்பிஎஃப் குழுவினரைப் பார்த்ததும், அந்த சந்தேக நபர்கள் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பியோட முயன்றனர். இருப்பினும், ஆர்பிஎஃப் காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பர்ஹர்வா ரயில் நிலையத்தில் அவர்களது பைகளை சோதனை செய்ததில், 174 பழைய ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் இருவரையும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்காக பர்ஹர்வா ரயில்வே போலீஸாரிடம் ஆர்பிஎஃப் ஒப்படைத்தது. பர்ஹர்வா ரயில் நிலையப் பொறுப்பாளர் ராம்ஷங்கர் சிங் கூறுகையில், இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேற்கு வங்கத்தின் மால்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மொபைல் போன்களை வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அவர்கள் கடத்திச் சென்றதாகவும் பர்ஹர்வா ஆர்பிஎஃப் ஆய்வாளர் சஞ்சீவ் குமார் கூறினார்.