மணிமுத்தாறு அணையிலிருந்து ஜன. 12 முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவு
மணிமுத்தாறு அணையிலிருந்து ஜனவரி 12-ஆம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: மணிமுத்தாறு அணையிலிருந்து ஜனவரி 12-ஆம் தேதி முதல் நீர் திறக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1 மற்றும் 2 ஆவது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுகப் பாசனப் பகுதிகளில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடிமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருங்குடிமக்களின் வேண்டுகோளினை ஏற்று மணிமுத்தாறு அணையிலிருந்து, மணிமுத்தாறு பிரதானக் கால்வாயின் 1 மற்றும் 2 ஆவது ரீச்சுகளின் கீழ் உள்ள மறைமுக பாசனப்பரப்புகளுக்கு 12.1.2021 முதல் 31.3.2021 வரை 79 நாட்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம் வட்டம் ஆகிய வட்டங்களில் உள்ள 11134 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Advertisement
வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2020-2021ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, 24,059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 11.1.2021 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.