கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு விபத்து மரண உதவித் தொகையாக ரூ.5 லட்சம் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000, குடும்ப ஓய்வூதியம் ரூ.500 உள்பட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Advertisement
இதன் தொடா்ச்சியாக, தைப் பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 5 லட்சத்து 94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளா்களுக்கு வேட்டி, துண்டு, 6 லட்சத்து 75,403 பெண் தொழிலாளா்களுக்கு புடவை அளிக்கப்படுகிறது. இத்துடன் 2 கிலோ பச்சரிசி, 1 கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், 1 கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், 25 கிராம் முந்திரி, 25 கிராம் திராட்சை ஆகியன அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட ரூ.94.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பினை தொழிலாளா்களுக்கு வழங்கிடும் விதமாக ஏழு பேருக்கு அவற்றை வழங்கி புதிய திட்டத்தை முதல்வா் பழனிசாமி தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் நிலோபா் கபில், தலைமைச் செயலாளா் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.