சாலையோர வியாபாரிகளுக்கு சாலை ஓரத்திலேயே முகாமிட்டு வங்கிக்கடன் மேளா
வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்திற்கே நேரில் சென்று முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணர்வு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் - வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் உள்ள தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை மற்றும் சுற்றுலாப் பயணிகளை நம்பி தலையில் சுமந்து விற்பனை செய்பவர்கள், சைக்கிளில் இளநீர் தேநீர் விற்பனை செய்பவர்கள், தரைக்கடைகளில் உப்பு மிளகு விற்பவர்கள் தற்காலிக கடைகளில் பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், தள்ளு வண்டிகளில் கடலை சுண்டல் விற்பனை செய்பவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோயில் சாலையோர வியாபாரிகள் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதி திட்டம் பற்றி போதிய விழிப்புணர்வு இன்றி விண்ணப்பித்து பயன் பெறாமல் இருந்தனர். பேரூராட்சி அலுவலகம் வந்து வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கப் பலமுறை அறிவிப்பு செய்தாலும் தயக்கம் காட்டி வந்தனர்.
எனவே வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக சாலையோர வியாபாரிகள் பிழைப்பு நடத்தும் வைத்தீஸ்வரன் கோயில் கீழவீதி சாலையோரத்திற்கே நேரில் சென்று முகாம் அமைத்து திட்டம் பற்றி விழிப்புணர்வு செய்து வங்கிக் கடன் விண்ணப்பங்கள் பெற்றனர்.
Advertisement
செயல் அலுவலர் கு.குகன் தலைமையில் நடைபெற்ற முகாமில் இளநிலை உதவியாளர் ப. பாமா வரவேற்றார் . சமுதாய அமைப்பாளர் ரா. சிந்தியா விண்ணப்பம் நிரப்ப கற்றுக் கொடுத்தார் . வரிதண்டலர் ஜெ.அமுதா நன்றி கூறினார். பேரூராட்சி பரப்புரையாளர்கள் சரண்யா , அபிராமி ஓட்டுநர் ஜெ.மணிவண்ணன் மற்றும் நா, சுப்ரமணியன், சபரிநாதன், பாஸ்கரன், முனியாண்டி , வனிதா , பிரவீன் உள்ளிட்ட பணியாளர்கள் சாலையோர வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்து விண்ணப்பங்கள் பெறும் பணியில் ஈடுபட்டனர்.