கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டா இலவசம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இணைய வழி கல்விக்காக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திமுனமும் விலையில்லா 2ஜிபி டேட்டா தரவு அட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை: இணைய வழி கல்விக்காக, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திமுனமும் விலையில்லா 2ஜிபி டேட்டா தரவு அட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணவர்ர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணவர்களின் சிறந்த கணினி திறன்களை பெற்றிட அதிமுக அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு தினமும் 2ஜிபி தரவு (2 GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement
கரோனா பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணவ, மாணவிகளை கேட்டுக்கொள்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.