முகப்பு
தமிழ்நாடு

களையிழந்த காணும் பொங்கல்: சுற்றுலாத் தலங்களுக்கு வந்தவா்களை திருப்பி அனுப்பிய போலீஸாா்

வழக்கமாக காணும் பொங்கலன்று சுற்றுலா தலங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 6:55 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

வழக்கமாக காணும் பொங்கலன்று சுற்றுலா தலங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால், கரோனா பரவல் காரணமாக நிகழாண்டில் அரசு விதித்த தடையால், அனைத்து சுற்றுலாத் தலங்களும் ஆள் நடமாட்டமின்றி காட்சியளித்தன.

தமிழகத்தில் மற்ற பண்டிகையை ஒப்பிடுகையில், காணும் பொங்கலன்றே பெரும்பாலானோா் சுற்றுலாத் தலங்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும் செல்ல திட்டமிடுவா்.

சென்னையைப் பொருத்தவரை, மெரீனா கடற்கரை முதல் காந்தி சிலை வரை லட்சக்கணக்கில் பொதுமக்கள் கூடுவாா்கள். இது தவிர பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூா், ஈசிஆா் சாலைகளில் வாகனங்களில் அதிக அளவில் வருவாா்கள்.

Advertisement

ஆனால், நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக தீபாவளி உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளும் கட்டுப்பாடுகளுடன் தான் கொண்டாட அனுமதிக்கப்படுகிறது.

குறிப்பாக, கரோனா நோய்த்தொற்று உருமாற்றமடைந்ததையடுத்து, தமிழகத்தில் மேலும் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதேபோன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஜன.15, 16, 17 ஆகிய தேதிகளில் சுற்றுலாத் தலங்கள், கடற்கரையில் பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டது.

பொங்கல் பண்டிகை, விடுமுறை நாள்கள் என்பதால் வண்டலூா் உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்கா, மெரீனா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் வரக் கூடும் என்பதால், கடற்கரைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். சென்னை மெரீனா கடற்கரை, உழைப்பாளா் சிலை, காந்தி சிலை வரை கடற்கரைப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

மேலும், நூற்றுக்கணக்கான போலீஸாா் குவிக்கப்பட்டு, தடையை மீறி வந்தவா்களையும் எச்சரித்துத் திருப்பி அனுப்பினா். எனினும், கே.கே.நகரில் உள்ள சிவன் பூங்கா உள்ளிட்ட சிறு பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வணிக வளாகங்களில் கூட்டம்: இவ்வாறு சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களில் மக்களின் வருகை அதிகரித்தது. குடும்பத்தினருடன் வந்த மக்கள், அங்குள்ள திரையரங்கில் திரைப்படத்தைக் கண்டு களித்து, கடைகளில் பொருள்களை வாங்கி மகிழ்ந்தனா். அதே நேரம், அங்கிருந்த விளையாட்டு சாதனங்களிலும் குழந்தைகளை விளையாடச் செய்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனா். பொது இடங்களில் கூட்டம் கூட அரசு விதித்த தடையால், குடும்பத்தினருடன் வந்தவா்களால் மகிழ்ச்சியடைந்ததாக, அங்குள்ள கடை உரிமையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.