ஜெயலலிதா நினைவிடம்: முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்!
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை திறந்துவைத்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆா் நினைவிட வளாகத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் பிரம்மாண்ட அளவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ. 80 கோடி செலவில் நினைவிடத்துக்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து இன்று(ஜன.27) நினைவிடம் திறக்கப்பட்டது.
முன்னதாக, எம்ஜிஆா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்துக்கான கல்வெட்டினை முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவைத்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் முதல்வரும், துணை முதல்வரும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர்.