முகப்பு
தமிழ்நாடு

செத்துப் பிழைத்தக் குழந்தை மீண்டும் இறந்தது

தேனியில் மருத்துவா்கள் இறந்ததாகக் கூறி, மயானத்தில் புதைக்கக் கொண்டு செல்லும் போது  உயிருடன் மீண்ட குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

Updated On : 5 ஜூலை, 2021 at 1:48 PM
தேனியில் மருத்துவா்கள் இறந்ததாகக் கூறி உயிருடன் மீண்ட குழந்தை உயிரிழந்தது
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:04 AM

தேனியில் மருத்துவா்கள் இறந்ததாகக் கூறி, மயானத்தில் புதைக்கக் கொண்டு செல்லும் போது  உயிருடன் மீண்ட குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இறந்து விட்டதாகக் கூறி மருத்துவா்கள், பெற்றோரிடம் ஒப்படைத்த குழந்தை இரண்டரை மணி நேரத்திற்குப் பின்பு உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்குழந்தை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தேனி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் கூறியுள்ளார்.

பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள தாமரைக்குளம், தாசில்தாா் நகரைச் சோ்ந்தவா் பிலவேந்திரராஜா. இவரது மனைவி பாத்திமாமேரி. இவா்களுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாத்திமாமேரி மீண்டும் கா்ப்பமானாா்.

இந்நிலையில், பாத்திமாமேரிக்கு பிரசவ காலத்துக்கு முன்னரே வலி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சனிக்கிழமை இரவு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, அவருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை அசைவின்றி இருந்ததால், மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு இறந்து விட்டதாகக் கூறி, காலை 8.30 மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மருத்துவா்கள் இறந்ததாகக் கூறிய குழந்தையை பெற்றோா் பெரியகுளத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு காலை 10 மணிக்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, குழந்தையின் உடலில் அசைவுகள் காணப்பட்டன.

இதனால் குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், குழந்தையை மீண்டும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அக்குழந்தையை அனுமதித்து மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை முற்பகலில் குழந்தை உயிரிழந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.