முகப்பு
தமிழ்நாடு

’மாண்டஸ்’ புயல்: நாகை துறைமுகத்தில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் ஸ்ரீஹரிகோட்டா - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும்.

Updated On : 8 டிசம்பர் 2022, 10:00 pm IST
பகிர்:

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் ஸ்ரீஹரிகோட்டா - புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வெள்ளிக்கிழமை நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும் போது  மணிக்கு 65 - 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடம் என்பதால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக பலத்த மழை பெய்யும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Advertisement

Advertisement

மாண்டஸ் புயல் எதிரொலியாக நாகை துறைமுகத்தில் வியாழக்கிழமை காலை 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில், புயலின் தீவிரம் காரணமாக மாலையில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்  வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 27 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்பாக துறைமுகம் மற்றும் கரையோரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

மாவட்ட பேரிடர் மேலாண்மை சார்பில் 29 மீனவ கிராமங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் புயல் தொடர்பான விவரங்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். குறிப்பாக மாண்டஸ் புயலால் கன மழை பெய்யும் என்பதையும், கடல் சீற்றத்துடன் இருக்கும் என்பதையும் கூறி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் கரையை நோக்கி நெருங்கி வருவதால்,  நாகை கடல் பகுதி வியாழக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழுமம், கடற்கரை பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகரித்துள்ளனர். இதேபோன்று அரக்கோணத்தில் இருந்து நாகைக்கு வருகை தந்துள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் முகாமிட்டு, சுற்றுலா பயணிகளை கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்து திருப்பி அனுப்பினர்.


தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம்


நாகை மாவட்டத்தில் 134 இடங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு, இப்பகுதி மக்களை தங்கவைப்பதற்காக 5 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்கள், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக் கூடங்கள், 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளது.


இதேபோன்று, புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை மையங்கள் 23 செயல்பாட்டில் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அவசரக்கால கட்டுப்பாட்டு அறை மையத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி 043651077 எண்ணை தொடர்புக் கொண்டு இயற்கை இடர்பாடு மற்றும் மின்வாரியம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.


இதேபோல், அவசரக்கால மையத்தில் செயல்படும் 04365  251992 தொலைபேசி எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். மேலும், இந்த மையத்தில் உள்ள 8438669800 வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை குறுஞ்செய்தியாகவும் அனுப்பலாம். புயலை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments