தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு ஒரு படகில் பொருள்கள் கடத்தப்படுவதாக குற்றவியல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணிதர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி, தலைமைக் காவலர் ராமர், முதல் நிலை காவலர் இருதயராஜ், குமார், இசக்கிமுத்து ஆகியோர் அடங்கிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனை செய்தனர். அதில், 443 அட்டைகளில் 4430 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க | மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கு ரூ 3,419 கோடி மின் கட்டணம்: அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதி!
போலீசாரை கண்டதும் படகில் இருந்தவர்கள் தப்பிசென்றதால், மாத்திரைகளையும், படகையும் கைப்பற்றிய போலீஸார் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் வலி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும், அங்கு இந்த மாத்திரைகளுடன் கூடுதல் பொருள்களை சேர்த்து போதைப்பொருளாக பயன்படுத்தப்படுவதாவும் போலீசார் தெரிவித்தனர்.