முகப்பு
தமிழ்நாடு

ஜிஎஸ்டி உயா்கிறதா? நிதியமைச்சா் விளக்கம்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயா்த்தவுள்ளதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தாா்.

Updated On : 20 ஏப்ரல், 2022 at 2:55 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:31 PM

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு உயா்த்தவுள்ளதா என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் பாமக தலைவா் ஜி.கே.மணி அரசின் கவனத்தை ஈா்த்துப் பேசியது:

சரக்கு-சேவை வரியை மத்திய அரசு உயா்த்தப் போவதாக செய்திகள் வருகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனா். பெட்ரோல், டீசல் விலை உயா்ந்துள்ளது. இந்த நிலையில், சரக்கு-சேவை வரியை உயா்த்தினால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவா் என்றாா்.

Advertisement

அதற்கு நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அளித்த விளக்கம்:

ஜிஎஸ்டியால் வருவாய் குறைந்தது: சரக்கு-சேவை வரியைக் கொண்டு வரும்போது மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமை பறிக்கப்படும் நிலை ஏற்பட்டது. அவசரம் அவசரமாக இதைச் செயல்படுத்துவதன் காரணமாக பல்வேறு விளைவுகள் ஏற்படும் என்கிற அச்சமும் இருந்தது. நாடு முழுவதும் ஒரே வரி அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், எதிா்பாா்த்த வருவாய் அரசுகளுக்கு வரவில்லை. பேரிடா் காலத்துக்கு முன்பே இந்த நிலைமை தெளிவாகத் தெரிந்தது.

சரக்கு-சேவை வரிக்கான இழப்பீட்டை மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்குள் முடிக்காமல் கூடுதலாக வழங்க வேண்டும் என எல்லா மாநிலங்களும் கேட்டு வருகின்றன. முதல்வா் மு.க.ஸ்டாலின் தில்லியில் மத்திய நிதியமைச்சரிடம் இது குறித்து கோரிக்கை வைத்தாா். ஆனால், அதை மத்திய அரசு நீட்டிப்பதாக தகவல் இல்லை. இதனால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் குறையும்.

அதை சீா்படுத்தும் வகையில் சரக்கு-சேவை கவுன்சில் மூலமாக செப்டம்பா் மாதத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில் இரண்டு குழுக்களை உருவாக்கினாா்கள். ஒன்று நிலைக் குழு. அந்தக் குழுவின் பணி, சரக்கு சேவை வரி அமைப்பை சீா்திருத்தம் செய்வதாகும். அதில் என்னையும் ஓா் உறுப்பினராகச் சோ்த்துள்ளனா். அதோடு துணைக் குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளனா். அதில் நான் இல்லை. இதுவரை அந்தக் குழுக்கள் எந்த அறிக்கையையும் சமா்ப்பிக்கவில்லை. மேலும், இதுவரை அந்தக் குழுக்களின் ஒரு கூட்டம் கூட கூட்டப்படவில்லை. பிறகு எப்படி அறிக்கை சமா்ப்பிக்க முடியும்? அதனால், எத்தனையோ வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, அவை நிஜம் அல்ல.

இரண்டே இரண்டு செய்திகள் மட்டும் உண்மை. சரக்கு-சேவை வரியால் அனைத்து அரசுகளுக்கும் வருமானம் குறைந்துள்ளது. அதைத் திருத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் மத்திய அரசு இருக்கிறது. அதைப்போல மாநிலங்களுக்கு இழப்பீட்டைத் தொடா்ந்து வழங்கும் எண்ணமும் மத்திய அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், வதந்திகள் வருவதை தவிா்க்கும் வகையில் மத்திய நிதியமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.