மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்
மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றி...
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அனைத்து வகையிலும் திமுக உறுதுணையாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
Advertisement
Advertisement
“தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சி மேக்கேதாட்டு அணை. அணை கட்டுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தை நாடி தடை பெற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் கருணாநிதி.
கர்நாடகத்தில் அப்போது எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது.
2021-ல் ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமருக்கு அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகம் நிதி ஒதுக்கியவுடன் கண்டனம் தெரிவித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அனைத்து முயற்சிக்கும் திமுக உடன் நிற்கும். மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்காமல் இருக்கும் காரணத்தினால் குறுவை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வருகின்ற காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் நமது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்து நீரை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
தனித் தீர்மானத்தில், மேகதாது பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும்.
இந்த தீர்மானத்தை கடிதம் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதைவிட, அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஒன்றிணைந்து நேரடியாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Mekedatu Dam - DMK will stand firmly with the Tamil Nadu government - Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.