காஞ்சிபுரம் அண்ணா குடிலை பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
காஞ்சிபுரத்தில் பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து முற்றிலும் புதர்களால் சூழ்ந்துள்ள அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடிலை அரசு பராமரிக்க வேண்டும்
காஞ்சிபுரத்தில் பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து முற்றிலும் புதர்களால் சூழ்ந்துள்ள அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடிலை அரசு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளத்திற்கு கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழக அரசால் 7 ஏக்கர் நிலம் 20 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் நூலகம், மூலிகைப் பண்ணை, முதியோர் இல்லம் நடத்தி வந்தனர்.
அண்ணா சிலை வைக்கப்பட்டு அண்ணா குடில் என்று அழைக்கப்படும் இந்த இடத்தை அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினரான மலர்வண்ணன், சௌமியா, இளவரசி ஆகியோர் பராமரித்து வந்தனர்.
பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து காணப்படும் அண்ணா குடில்
அரசு குத்தகை நிலத்தை அண்ணாவின் குடும்பத்தினர் பராமரித்து வந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்ததை அடுத்து அந்த 7 ஏக்கர் நிலத்தை அதிமுகவினர் அபகரிக்க முயல்வதாகவும் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தி மீண்டும் அண்ணாவின் வாரிசுகளுக்கே வழங்க வேண்டும் என காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் தலைமையில் எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் அப்போதைய ஆட்சியர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிக்க |
அதன்பின் பிரச்னை முடிவிற்கு வந்த நிலையில், அண்ணா சிலை வைக்கப்பட்ட குடில் இடம் முற்றிலும் புதர்களால் சூழ்ந்துள்ளது. மேலும், அண்ணாவின் சிலை பராமரிப்பின்றி வண்ணங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் தற்போதைய திமுக அரசு, அவரது சிலையினையும், அவர் நினைவாக வழங்கப்பட்ட இடத்தையும் பராமரிக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.