சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 பேர் கைது
சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம்: சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் நெருப்பு பற்றி வீட்டின் முன்பு மர்மநபர்கள் வீசியுள்ளனர். இந்த தீயினால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக ராஜன் அளித்த புகாரின்பேரில் ஏழு பேரை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், காதர்உசேன், சையத்அலி ஆகிய இருவர் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
Advertisement
Advertisement
இந்த இருவர் மீதும் தீவைத்து பாதிப்பு ஏற்படுத்த முயற்சி செய்தல், நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், மதநல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரோனா பரிசோதனை செய்து நீதிமன்ற காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின் பாஜக, ஆர்எஸ்எஸ்: திருமாவளவன்
இதனிடையே சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் மாநகரில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தேகத்திற்குரிய இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்ததில் சையதுஅலி, காதர் உசேன் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் முழுவதும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஷெரிப்பாஷா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பொதுச்செயலாளர் முகமது ரஃபி மற்றும் இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்தவர்கள் முகமது இஸ்மாயில், முகமதுஆரிஸ், காஜா உசேன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.