முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On : 17 மார்ச் 2023, 9:22 am IST
பகிர்:

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். 

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகளுடன் வியாழக்கிழமை(மார்ச் 16) பேச்சுவார்த்தை நடத்தினார். 

Advertisement

Advertisement

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டப்படி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் தெரிவித்தது. 

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால் விலை உயர்வுக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். 

தினசரி 38 லட்சம் லிட்டா் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது 25 லட்சம் லிட்டா் ஆக குறைந்திருக்கிறது.

ஆவின் நிறுவனம் சில நாட்களாக மாநிலத்தின் பல இடங்களில் பால் வினியோகம் செய்ய முடியாமல் தடுமாறுகிறது.

தற்போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற விலையை விட லிட்டருக்கு 10 ரூபாய் வரை தனியாா் நிறுவனங்கள் அதிகமாக கொடுக்கின்றனா்.

ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற விலையை விட பாலுக்கான உற்பத்தி செலவு மிகவும் அதிகமாக இருக்கின்றது.

அதனால் தனியாருக்கு நிகராக அரசு விலையை வழங்க வேண்டும். பசும் பாலுக்கு ரூ.35-இல் இருந்து ரூ.42 ஆகவும், எருமை பால் ரூ.44-இல் இருந்து ரூ.51 ஆகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என்பது பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது. 

பாலை ஆவின் நிறுவனத்திற்கு அளிக்காமல், தனியாருக்கு அளிப்போம் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் நிலவியுள்ளது. 

பால் கொள்முதல் விலையை உயா்த்தி கொடுப்பதன் மூலமாகத்தான் ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை அதிகப்படுத்த முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.