கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எஸ்ஸ் தளப் பதிவில், பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு தொடா்பாக தமிழக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் கேள்வி எழுப்பியிருந்தாா். அதுதொடா்பாக அவருக்குக் கிடைத்த பதிலை கொண்டு ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை வெளியானது. இந்தச் செய்தித் கட்டுரையை குறிப்பிட்டு பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: கச்சத்தீவு குறித்த தகவல் வியப்பு அளிப்பதுடன் திடுக்கிட வைத்துள்ளது.
பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் எப்படித் தாரைவாா்த்தது என்பதைப் புதிய தகவல்கள் எடுத்துரைக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என்பது மக்கள் மனதில் மீண்டும் உறுதியாகியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களைப் பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் பணியாக உள்ளது. அது தொடா்ந்து நீடிக்கிறது என்றாா்.
பிரதமரின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடனே விளக்கம் கொடுத்திருந்தார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், நீங்கள் இந்த முக்கியமான பிரச்னையை எழுப்புகிறீர்கள். பிரதமரே நீங்கள் சொல்ல வேண்டும், இந்த பிரச்னையை தீர்க்கவும் கச்சத்தீவை மீட்பதற்கும் உங்கள் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்ததா? என பிரதமருக்கு பதில் கேள்வி எழுப்பியிருந்தார். கச்சத்தீவு விவகாரத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பிரதமர் மோடி இன்று திமுகவை விமர்சித்துள்ளார்.
அதற்கு திமுக தரப்பில் ஸ்டாலின் 3 கேள்விகளை எழுப்பி பிரதமர் பதில் தருவாரா என வினவியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.