ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி! ஆனால்..
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் இலகு ரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி!
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் கனமழையால் சாலைகள் சேதமடைந்திருந்ததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், முதல்கட்டமாக இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகலில் இருந்து சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பாதையில் இலகுரக வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்கியிருக்கிறது.
ஃபென்ஜால் புயல் காரணத்தால் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
Advertisement
இதனையடுத்து சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் கடந்த திங்கள்கிழமை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இன்று மூன்றாவது நாளாக மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஏற்காடு மலை பாதையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டதால் ஏற்காடு மலை கிராமங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் மாற்று வழியான கொட்டசேடு குப்பனூர் மலைப்பாதையில் எடுத்து வரப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் நான்கு நாள்களாக மின்சாரம் இன்றி மலை கிராம மக்கள் சிரமப்பட்டனர். நேற்று இரவு முதல் ஏற்காடு நகர்ப்பகுதி மற்றும் இருபது கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.
இன்று பிற்பகலில் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.