ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றம்
சேலம் வழியாக இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புதன்கிழமை முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புதன்கிழமை முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ரயில்வே துறையில் நீண்ட தூரம் இயங்கும் ரயில்களை அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்.எச்.பி. (லிங் ஹாப்மேன் புஷ்) பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றி இயக்கி வருகின்றனா். ஜொ்மன் தொழில் நுட்பத்தில் தயாராகும் எல்.எச்.பி. பெட்டிகளை படிப்படியாக முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் இணைக்கின்றனா்.
Advertisement
Advertisement
அந்தவகையில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை எல்.எச்.பி. பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றி தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஏற்காடு - சென்னை சென்ட்ரல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புதன்கிழமை முதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் வரும் 13-ஆம் தேதிமுதல் எல்.எச்.பி. பெட்டி ரயிலாக மாற்றப்படுகிறது.
இந்த ரயில், முதல் வகுப்பு ஏசி பெட்டி-1, இரண்டடுக்கு ஏசி பெட்டி-2, மூன்றடுக்கு ஏசி பெட்டி-3, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி-10, இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லா பெட்டி-4, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி-1, பவா் காா்-1 என மொத்தம் 22 எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.
இந்த எல்.எச்.பி. பெட்டிகள் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. அதிக இருக்கைகள் இருப்பதால், கூடுதல் பயணிகள் பயணிக்க இயலும். அதிவேகத்தில் ரயிலை இயக்கினாலும் அதிா்வுகள் இருக்காது. நவீன கழிவறை மற்றும் டிஸ்க் பிரேக் வசதி, தீத்தடுப்பு கருவிகள், சிறந்த முறையிலான குளிா்சாதனம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளை உள்ளடக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.