முகப்பு
தமிழ்நாடு

கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றிய வேங்கடாசலபதி: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றிய வேங்கடாசலபதி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 18 டிசம்பர் 2024, 4:35 pm IST
பகிர்:

சென்னை: கலகம் என்பதை திருத்தி எழுச்சி என மாற்றியவர் ஆ.இரா. வேங்கடாசலபதி என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

தமிழ் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908- என்ற நூலுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் தமிழ் பேராசிரியர் ஆர். இரா. வேங்கடாசலபதிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக சுவதேஷ்ஸ்டீம் (SwadeshiSteam) என்ற நூலை வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் சாகித்திய அகாதெமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!

கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்! என்று பதிவிட்டுள்ளார்.

திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சியும் 1908- என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு துறை தலைவர்களும் எழுத்தாளர்களும் ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகளில் மிகவும் முக்கியமானது 1908ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அப்போது ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் அதன் தாக்கத்தையும் பல அரிதான தகவல்களுடன் எடுத்துச் சொல்லும் ஆய்வு நூல் 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908' என்று சு. வெங்கடேசன் எம்.பி. புகழ்ந்துள்ளார்.

1908ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சி குறித்தும், அதன் விளைவுகளையும் இந்த நூல் விரிவாக ஆராயும் வகையில் அமைந்திருக்கிறது.

2024ஆம் ஆண்டு 21 மொழிகளில் எட்டு கவிதைப் புத்தகங்கள், 3 நாவல்கள், 2 சிறுகதைகள், 3 கட்டுரைகள், 3 இலக்கிய விமர்சனங்கள், 1 நாடகம் மற்றும் 1 ஆய்வுப் புத்தகங்களுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெறுவோருக்கு ஒரு பதக்கமும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments